பாமணி ஆற்றில் உடலில் காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை

மன்னார்குடி பாமணி ஆற்றில் உடலில் காயங்களுடன் வாலிபர் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-03-11 22:15 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாதா கோவில் தெரு அருகே செல்லும் பாமணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் வாலிபரின் பிணம் மிதப்பதாக மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஆற்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் பெயர் அசோகன்(வயது 35) கூலித்தொழிலாளி என்பதும், மன்னார்குடி விழல்காரத் தெருவை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் என்பதும் தெரிய வந்தது.

அசோகனின் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்கள் உள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்