பிரம்மதேசம் அருகே, கல்லூரி மாணவி, விஷம் குடித்து தற்கொலை - தேர்வில் தோல்வியடைந்ததால் விபரீத முடிவு

பிரம்மதேசம் அருகே தேர்வில் தோல்வியடைந்ததால் கல்லூரி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Update: 2019-03-11 23:00 GMT
பிரம்மதேசம், 

பிரம்மதேசம் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் மோகன ஜெயப்பிரியா (வயது 18). இவர் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் மோகன ஜெயப்பிரியா தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையிலேயே காணப்பட்டார். இந்த நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மோகன ஜெயப்பிரியா தற்கொலை செய்ய முடிவு செய்து, நேற்று காலை வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோகன ஜெயப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்