தஞ்சை அருகே சுளுக்கியால் குத்தி வாலிபர் கொலை அண்ணன் கைது

தஞ்சை அருகே சுளுக்கியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-12 23:15 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் சின்னப்பன் (வயது39). இவருடைய தம்பி ராஜேஷ்(31). இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சின்னப்பனும், ராஜேசும் பரமேஸ்வரன் காலனியில் எதிர் எதிர் வீடுகளில் வசித்து வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்து வந்த ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை சின்னப்பனும், ராஜேசும் தங்கள் வீடுகளில் இருந்தனர். அப்போது திடீரென இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் இருவரும் தெருவுக்கு வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த சின்னப்பன் தனது வீட்டில் இருந்து சுளுக்கியை(கூர்மையான ஆயுதம்) எடுத்து வந்து ராஜேஷ் நெஞ்சில் பலமாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜேஷ் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து சின்னப்பனை பிடித்து வைத்துக்கொண்டு திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னப்பனை கைது செய்தனர். மேலும் ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட ராஜேசுக்கு திருமணமாகி செல்வராணி என்ற மனைவி உள்ளார்.

குடும்ப பிரச்சினையில் வாலிபர் ஒருவரை அவருடைய அண்ணனே சுளுக்கியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்