தேர்தல் நடத்தை விதி அமல்: நன்னிலம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ‘சீல்’ விளம்பர பேனர்கள்-சுவரொட்டிகள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நன்னிலம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ‘சீல்’ வைக்கப்பட்டது. விளம்பர பேனர்கள்-சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

Update: 2019-03-12 22:30 GMT
வலங்கைமான்,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நன்னிலம் சட்டசபை தொகுதியில் தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நன்னிலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் பகுதியில் அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள், விளம்பர பேனர்களை அகற்ற பறக்கும்படை அதிகாரி பாலசுப்பிரமணியன், தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்பேரில் சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.

மேலும் அரசு திட்டங்கள் குறித்த விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன. வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் இருந்த விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றும் பணியை பேரூராட்சிகள் இணை இயக்குனர் குற்றாலிங்கம் நேற்று ஆய்வு செய்தார்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி வலங்கைமான் போலீஸ் நிலையம் அருகே உள்ள நன்னிலம் எம்.எல்.ஏ. அலுவலகம் நேற்று முன்தினம் பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்