திருவாரூரில், அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடந்தது

பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் வன்முறை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-13 23:00 GMT
திருவாரூர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி உள்பட பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிராக நடந்த இந்த பாலியல் கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்்.

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க நிர்வாகி பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்