மரக்காணத்தில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - தேர்வு தோல்வி பயத்தால் விபரீத முடிவு

மரக்காணத்தில் தேர்வுதோல்வி பயத்தால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-03-13 22:30 GMT
மரக்காணம்,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் முருக்காணம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன், விவசாயி. இவருடைய மகன் துர்காராஷ் (வயது 15). இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வுக்கு மாணவர் துர்காராஷ் சரியாக படிக்காததால், தேர்வு தோல்வி அடைந்துவிடுவோம் என்று பயந்துபோய் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துர்காராஷ் தனது பாட்டியின் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், துர்காராஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று (வியாழக்கிழமை) தேர்வு நடைபெற இருந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்