கோவை அருகே, அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

கோவை அருகே அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-03-14 23:00 GMT
துடியலூர், 

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு வி.வி.கே. நகர் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி தெய்வானை (வயது 50). இவர் வெள்ளக்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர்களது மகள் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் தெய்வானை வழக்கும்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது மகள் வீட்டில் உள்ள ஒரு அறையில் தேர்வுக்கு படித்துக்கொண்டு இருந்தார்.

வீட்டுக்கு வந்த தெய்வானை மகளுடன் சரியாக பேசாமல் மற்றொரு அறைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மகள் அம்மாவை அழைத்தப்படி அறைக்கு சென்றார். அங்கு தெய்வானை தூக்கில் பிணமாக தொங்கினார். தாயின் உடலை பார்த்து மகள் கதறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெய்வானை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததும், இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்