ஆள்மாறாட்ட வழக்கு மராட்டிய சாமியார், துபாயில் கைது

ஆள்மாறாட்ட வழக்கில் மராட்டிய சாமியார் சுதிர் பிரபாகர் பூஜாரி, துபாயில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Update: 2019-03-14 22:30 GMT
துபாய்,

மராட்டிய மாநிலம் நாசிக் நகரை சேர்ந்த பிரபல சாமியார் சுதிர் பிரபாகர் பூஜாரி (வயது 54). இவர் 2007-ம் ஆண்டு நாசிக் நாடாளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு விசுவஇந்து பரிஷத்தில் சேர்ந்து உறுப்பினரானார். அதில் அவர் ஆலோசகராகவும் உள்ளார். அதேபோல் ஆர்.எஸ்.எஸ், இயக்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு செயலாற்றினார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் துபாயில் கர்கூத் பகுதியில் உள்ள இத்தாரா என்ற கட்டிடத்தில் 3 நிறுவனங்களை தொடங்கினார். தனது பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தனது பெயரை மஹானாத் சுதிர்தாஸ் பூஜாரி மஹராஜ் என்று குறிப்பிட்டார்.

இவர் மீது இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் ஒரு வழக்கு தொடர்ந்தனர். தற்போது அவரது பங்குதாரர் ஒருவர் இந்த சாமியார் மீது தன்னை அரச குடும்பத்தினராக காட்டி ஆள்மாறாட்டம் செய்ததாக துபாயில் புகார் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து அவர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தப்பி செல்ல முயற்சி செய்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய துணைத்தூதர் விபுல் கூறியதாவது:-
சுதிர் பிரபாகர் பூஜாரியின் வழக்கு குறித்து முழுமையாக அவரிடம் தெரிவிக்கவில்லை. அவர் கைது செய்யப்பட்டதும் துணைத்தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மொழிபெயர்ப்பு உதவி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதால் இந்திய துணைத்தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரது ஜாமீன் குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் நாசிக்கில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்