முன்விரோதத்தில் தகராறு: தாய்- மகள் மீது தாக்குதல் தந்தை- மகன் கைது

மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் தாயும், மகளும் தாக்கப்பட்டனர். இது தொடர் பாக தந்தை- மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-14 22:15 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மங்கநல்லூர் கழனிவாசல் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்தி (வயது 57). ராமலிங்கமும், கிருஷ்ணமூர்த்தியும் பக்கத்து வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ராமலிங்கம் வீட்டில் இல்லாதபோது அவரது மனைவி சீனியம்மாள் (60), மகள் சரோஜினி (31) ஆகியோரிடம் நில பிரச்சினை தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி வனரோஜா, மகன் மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகராறு செய்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து, சீனியம்மாள், சரோஜினி ஆகிய 2 பேரையும் உருட்டு கட்டை மற்றும் சுத்தியலால் தாக்கியதாக தெரிகிறது.

கைது

இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சீனியம்மாள் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் மணிகண்டன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கிருஷ்ணமூர்த்தி மனைவி வன ரோஜாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்