ராணிப்பேட்டையில் பரபரப்பு மகளிர் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் போலீசார் தடுத்து விசாரணை

மகன்களை கணவனிடம் இருந்து மீட்டு ஒப்படைக்கக்கோரி மகளிர் போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-03-14 21:45 GMT
ராணிப்பேட்டை, 

ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பவுல் ஆனந்த். இவருக்கும் சென்னையை சேர்ந்த நான்சி (வயது 30) என்ற பெண்ணுக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் பவுல் ஆனந்த் மனைவியை பிரிந்து மகன்களுடன் ஆற்காட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தனது மகன்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி நான்சி, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நான்சி மண்எண்ணெய் கேனுடன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொள்ள முயற்சித்தார்.

இதைப் பார்த்த போலீசார் அவரிடமிருந்து மண்எண்ணெய் கேனை பறித்து அவரை சமாதானப்படுத்தினர். அதன்பிறகு நான்சி தரையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது கணவர் பவுல் ஆனந்த், மாமியார் மின்னலா, மாமனார் லூர்துநாதன், உறவினர் பீட்டர் ஆகியோர் வீடு கட்ட பணம் மற்றும் நகைகள் வேண்டும் என கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்