பூக்கடை பகுதியில் வாலிபரின் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் பறிப்பு

பூக்கடை பகுதியில் வாலிபரின் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சத்தை மர்மநபர் பறித்து சென்று விட்டார்.

Update: 2019-03-15 22:30 GMT
பிராட்வே,

சென்னை தங்கசாலை மின்ட் தெருவை சேர்ந்தவர் வசந்த் (வயது 18). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு பாரிமுனை கோவிந்தப்பா தெரு, ஆதியப்பா தெரு சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் இருந்து யாரோ அழைப்பது போல தோள் பகுதியை தட்டியதால் வசந்த் திரும்பி பார்த்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை மர்மநபர் ஒருவர் பறித்துச்சென்று விட்டார்.

இதுபற்றி பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரின் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சத்தை பறித்துச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் கங்கை நகர் ஜெயசூர்யா தெருவை சேர்ந்தவர் கிஷோர் (22). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பணம் வசூலித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஆவடி அடுத்த பூச்சத்திபேடு பஜனை கோவில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கிஷோரை வழி மறித்து அவரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை பறித்துச்சென்று விட்டனர். இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்