ஏலச்சீட்டு நடத்தி ரூ.37½ லட்சம் மோசடி, அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் ஊழியருக்கு 7 ஆண்டு சிறை

ஏலச்சீட்டு நடத்தி 56 பேரிடம் ரூ.37½ லட்சம் மோசடி செய்த வழக்கில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-03-15 23:04 GMT
கடலூர்,

சிதம்பரம் அண்ணாமலைநகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவருடைய மகன் பாலா என்கிற பால சுப்பிரமணியன் (வயது 41). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு குடிநீர் குழாய்கள் சரி செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இது தவிர பாலா என்கிற பெயரில் அவர் கடந்த 2011-2013-ம் ஆண்டு வரை ஏலச்சீட்டு நடத்தினார். அதில் 56 பேரிடம் சீட்டு பணமாக மொத்தம் ரூ.37 லட்சத்து 66 ஆயிரத்து 225 வசூல் செய்தார்.

ஆனால் அந்த சீட்டுகள் முடிந்த நிலையில், 56 பேருக்கும் சேரவேண்டிய சீட்டு பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் பாலசுப்பிரமணியனை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதன் பின்னர் விசாரித்த போது, சீட்டு பணத்துடன் பாலசுப்பிரமணியன் தலைமறைவாகி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இது பற்றி பாதிக்கப்பட்ட சிதம்பரத்தை சேர்ந்த நடேசன் மனைவி சித்ரா கடலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். இதற்கிடையே அவரை பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக பாலசுப்பிரமணியன் மீது 3 குற்றப்பத்திரிக்கையை போலீசார் கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், பாலசுப்பிரமணியன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஒவ்வொரு குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அவருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு, அவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து பாலசுப்பிரமணியன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்