பரமத்தி, சேந்தமங்கலத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் பார்வையிட்டார்

பரமத்தி, சேந்தமங்கலத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆசியா மரியம் பார்வையிட்டார்.

Update: 2019-03-16 22:45 GMT
பரமத்திவேலூர்,

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், சங்ககிரி மற்றும் பரமத்தி வேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது குறித்த மண்டல அலுவலர்களுக்கான முதற் கட்ட பயிற்சி வகுப்புகள் அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.

பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி பரமத்தி சமூதாய கூட்டத்தில் நடைபெற்றது. பரமத்தி வேலூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தேவிகாராணி தலைமையில் இப்பயிற்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆசியா மரியம் பயிற்சியை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 26 மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் 26 துணை மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நாளில் பயன்படுத்தப்படும் விவிபேட், கண்ட்ரோல் யூனிட், பேலட் போன்ற எந்திரங்களின் செய்பாடுகள் குறித்து வீடியோ படக்காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துரை பயிற்சி அளித்தார்.

இந்த பயிற்சியை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் மேற்பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதில் சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புஷ்பராஜ், தனபால், உதவி தேர்தல் அலுவலர் சரவணன் உள்பட தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்