மதுரையில் ஒரே நாளில் ரூ.35 லட்சம் பிடிபட்டது

மதுரையில் நேற்று ஒரேநாளில் வாகன சோதனையின்போது ரூ.35 லட்சம் பிடிபட்டது.

Update: 2019-03-16 21:30 GMT
மதுரை,

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மதுரை மாவட்டத்தில் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜன் உத்தரவின் பேரில் 70-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மதுரை மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணம் இன்றி பணம் கொண்டு சென்றால், அதனை பறக்கும் படையினர் கைப்பற்றி வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வியாபாரி ஒருவரிடம் இருந்து ரூ.66 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ஆனால் அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் பணம் என்று கூறி அதற்கான ஆவணங்களை கொடுத்தார். அதன்பின் அந்த பணத்தை மீண்டும் அவரிடம் கொடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.35 லட்சத்து 35 ஆயிரத்து 100 சிக்கியது. அதன்படி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரவை சோதனை சாவடியில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500, மதுரை வடக்கு தொகுதி சூர்யா நகரில் ரூ.72 ஆயிரத்து 600-ம் மற்றும் பெருங்குடி சோதனை சாவடியில் ரூ.33 லட்சத்து 50 ஆயிரமும் பிடிப்பட்டது. அதில் பெருங்குடியில் சிக்கிய ரூ.33 லட்சத்து 50 ஆயிரம் வங்கிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இருப்பினும் அவர்களிடம் இருந்து முறையான ஆவணம் வந்த பிறகு அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்.

மேலும் செய்திகள்