பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல் திண்டிவனத்தில் பரபரப்பு

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து திண்டிவனத்தில் வக்கீல் கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-16 21:30 GMT
திண்டிவனம்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ- மாணவிகள், வக்கீல்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து திண்டிவனத்தில் நேற்று வக்கீல்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் பார் அசோசியேஷன் சங்க தலைவர் அருணகிரி, அட்வகேட் அசோசியேஷன் தலைவர் நாகையா, அட்வகேட் நலச்சங்க செயலாளர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் வக்கீல்கள் ஆதித்தன், விஜயன், செந்தில், செந்தாமரைக் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் வக்கீல்கள் தாங்களாகவே மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்