தானே, கல்யாண், டிட்வாலா, அசன்காவ் ரெயில் நிலையங்களில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் நடைமேம்பாலங்கள் பயணிகள் அச்சம்

தானே, கல்யாண், டிட்வாலா, அசன்காவ் ரெயில் நிலையங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள நடைமேம்பாலங்கள் உயிர்பலி வாங்க காத்திருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

Update: 2019-03-16 22:51 GMT
மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் நடைமேம்பாலம் கடந்த 14-ந்தேதி இரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 6 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள். இந்தநிலையில், மத்திய ரெயில்வே வழித்தடத்தில் தானே, கல்யாண், டிட்வாலா, அசன்காவ் ரெயில் நிலையங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள நடைமேம்பாலங்கள் உயிர்பலி வாங்க காத்திருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி அந்த ரெயில் நிலையங்களுக்கு தினசரி வந்து செல்லும் பயணிகள் கூறியதாவது:-

டிட்வாலா, தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் உள்ள நடைமேம்பாலங்கள் கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன.

அசன்காவில் உள்ள ஒரு நடைமேம்பாலம் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இந்த நடைமேம்பாலம் எந்த நேரத்திலும் இடிந்து உயிர் பலி வாங்கும் அபாயம் உள்ளது. எனவே அபாயகரமான அந்த நடைமேம்பாலத்தை உடனடியாக ரெயில்வே சீரமைத்து கட்டவேண்டும். மேலும் கல்யாண் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேம்பாலங்கள் ரெயில்கள் செல்லும் நேரத்தில் அதிரும் அளவுக்கு மோசமாக இருக்கின்றன.

எனவே ரெயில்வே பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதடைந்த நிலையில் உள்ள நடைமேம்பாலங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்