பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-18 22:00 GMT
நெல்லை, 

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் நேற்று மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். மாணவர் கார்த்திக் தலைமை தாங்கினார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி வளாகத்தில் கொளுத்தும் வெயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவிகள் பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் தரையில் அமர்ந்து மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்கள், மாணவிகளுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும் என்றனர்.

போராட்டத்தையொட்டி மாநகர உதவி போலீஸ் கமிஷனர் கோடிலிங்கம், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்