திருச்சி உறையூர் கோவிலில் கமலவல்லி நாச்சியாருடன் நம்பெருமாள் சேர்த்தி சேவை திரளான பக்தர்கள் வழிபாடு

திருச்சி உறையூர் கோவிலில் கமலவல்லி நாச்சியாருடன் நம்பெருமாள் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

Update: 2019-03-18 22:30 GMT
திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உற்சவரே உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலுக்கும் உற்சவராக இருக்கிறார். எனவேதான், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் மட்டும் உற்சவ விக்ரகம் இருக்கிறது. பெருமாளுக்கு உற்சவ விக்ரகம் இல்லை. மாறாக ஆண்டுக்கு ஒருமுறை கமலவல்லி நாச்சியாரின் ஜென்ம நட்சத்திரமான(பிறந்தநாள்) பங்குனி ஆயில்யத்தன்று ஸ்ரீரங்கத்தில் நடக்கும் ஆதிபிரம்மோற்சவத்தின் 6-ம் நாளில் ரெங்கநாதர்(நம்பெருமாள்) உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலுக்கு வந்து அவருடன் திருமண கோலத்தில் சேர்ந்திருந்து பக்தர்களுக்கு ‘சேர்த்தி சேவை’ அளித்து காட்சியளிப்பது வழக்கம்.

திருமணத்தடை உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று கமலவல்லி நாச்சியாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. அதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் அழகிய மணவாளனான நம்பெருமாள், கோவில் கண்ணாடி அறையில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டியை கடந்து மதியம் 12 மணிக்கு கமலவல்லி நாச்சியார் கோவில் மண்டபத்தை அடைந்தார்.

அப்போது, பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு, உறையூரின் மாப்பிள்ளையான நம்பெருமாளுக்கு வரவேற்பு கொடுத்தனர். கோவிலுக்கு வந்த நம்பெருமாள், மூலஸ்தானம் எதிரே நின்று கமலவல்லி நாச்சியாரை அழைத்து, பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு சென்றார்.

பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொண்டார். பின்னர் நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் திருமணக்கோலத்தில் சேவை சாதித்தனர். பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியாருடன் திருமணக்கோலத்தில் சேர்த்தி சேவையாற்றினார். இந்த சேர்த்தி சேவை காட்சியை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சேர்த்தி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் செல்கிறார். அங்கு அதிகாலை 4 மணிக்கு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலைமாற்றிக்கொண்டு கண்ணாடி அறையில் சேரும் நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும் செய்திகள்