நாகர்கோவில் அருகே தூக்கில் இளம்பெண் பிணம் உதவி கலெக்டர் விசாரணை

நாகர்கோவில் அருகே தூக்கில் இளம்பெண் பிணமாக தொங்கினார். அவர் சாவு குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்துகிறார்.

Update: 2019-03-18 23:00 GMT
அழகியமண்டபம்,

நாகர்கோவில் அருகே உள்ள களியங்காடு சிவபுரம் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன், தொழிலாளி. இவருடைய மனைவி வீணா (வயது 25). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை மணிகண்டன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் அவர் வீடு திரும்பிய போது வீணா மின்விசிறியில் தூக்கில் தொங்கியதாகவும், உடனே அவரை அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும், அப்போது டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வீணா இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

இதுபற்றி இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து, வீணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் வீணாவின் தாயார் லதா இரணியல் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். அதன்பேரில் வீணா சாவு குறித்து பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி விசாரணை நடத்துகிறார். திருமணம் ஆகி 5 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்