அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்தவர் கைது

சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-19 22:35 GMT
சேலம்,


சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில், நான் சேலத்தில் உள்ள வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கபாகாந்தி (வயது 60) என்பவர் அறிமுகம் ஆனார்.

அப்போது என்னிடம் அவர், தலைமை செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பலர் எனக்கு நன்கு தெரியும் என்றும், அவர்கள் மூலம் கிராம நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட வேலை வாங்கி கொடுக்க முடியும் என்று நம்பும்படி கூறினார்.

இதைத்தொடர்ந்து நான், எனது மகன், உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்கள் என 20 பேரிடம் இருந்து ரூ.76 லட்சம் வாங்கி கபாகாந்தியிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அரசு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். மேலும் அவர், போலியாக வேலைவாய்ப்பு ஆவணங்களை தயாரித்து எங்களிடம் கொடுத்தார். அதன்பிறகு தான் அவர் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கபாகாந்தியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் என்னை மிரட்டி வருகிறார், என கூறியிருந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் கபாகாந்தி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று கபாகாந்தியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்