கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-03-20 22:30 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் கோவில் உள்ளது. மகாமக விழா தொடர்புடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 12–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 16–ந் தேதி ஓலை சப்பர வீதி உலாவும், 18–ந் தேதி இரவு திருக்கல்யாணமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக தேரில் சுவாமிகள் எழுந்ததருள செய்யப்பட்டனர்.


பின்னர் தேருக்கு திறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கும்பகோணம் நகரின் முக்கிய வீதிகளான நாகேஸ்வரன் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக கோவிலை அடைந்தது. அப்போது அனைத்து வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திரளான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்ததது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இன்று (வியாழக்கிழமை) பங்குனி உத்திர திருவிழாவன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

மேலும் செய்திகள்