பாறாங்கல்லை தலையில் போட்டு தொழிலாளி படுகொலை வாலிபர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே தலையில் பாறாங்கல்லை போட்டு தொழிலாளியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-20 23:15 GMT
கரூர்,

நெல்லை மாவட்டம் சுந்தரேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டியன் (வயது 65). கல்லுடைக்கும் தொழிலாளி. இவர் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே பஞ்சயம் கோட்டை பகுதியில் கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார்.

அதே கல்குவாரியில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள்மலை அடிவாரத்தை சேர்ந்த செல்வராஜ் (32) என்பவரும் கல்லுடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஒரு கல்குவாரிக்கு வேலைக்கு சென்றனர்.

அப்போது, இசக்கி பாண்டியனின் செல்போனை செல்வராஜ் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. தற்போது, அங்கிருந்து 2 பேரும் மீண்டும் பஞ்சயம் கோட்டை பகுதியில் உள்ள கல்குவாரிக்கு வேலைக்கு வந்துவிட்டனர்.

இந்தநிலையில் தனது செல்போனை செல்வராஜ் திருடியது குறித்து சக தொழிலாளர்களிடம் இசக்கி பாண்டியன் கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது, தன்னை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்தும்படி இசக்கி பாண்டியனிடம் செல்வராஜ் கூறியுள்ளார். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் மது குடித்து விட்டு இசக்கி பாண்டியன் தங்கி இருந்த குடிசைக்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.அப்போது, ஆத்திரமடைந்த செல்வராஜ் அங்கு கிடந்த பாறாங்கல்லை எடுத்து இசக்கி பாண்டியனின் தலையில் போட்டு அவரை படுகொலை செய்தார். இதில் தலை நசுங்கி இசக்கி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர், இசக்கி பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்த வேலாயுதம்பாளையம் போலீசார், அவரை கைது செய்தனர். முன்விரோதத்தில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்