உளுந்தூர்பேட்டை அருகே, பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை - தேர்வு சரியாக எழுதாததால் விபரீத முடிவு

உளுந்தூர்பேட்டை அருகே தேர்வை சரியாக எழுதாததால் பிளஸ்-2 மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-03-21 23:00 GMT
உளுந்தூர்பேட்டை, 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் சுகந்தி (வயது 17). இவர் எலவனாசூர்கோட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை சுகந்தி எழுதினார்.

ஆனால் அவர் தேர்வை சரியாக எழுதவில்லை என தெரிகிறது. இதனால் அவர் தேர்வு முடிந்த பின்னர் யாரிடமும் பேசாமல் இருந்தார். வீட்டுக்கு வந்த பின்னரும் அவர் பேசாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் அன்று இரவு சுகந்தி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுகந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வை சரியாக எழுதாததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்