சத்தியமங்கலம் அருகே பொக்லைன் எந்திரம்– கார் மோதல்; 2 பேர் பரிதாப சாவு

சத்தியமங்கலம் அருகே பொக்லைன் எந்திரம்–கார் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தார்கள்.

Update: 2019-03-23 22:45 GMT

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுகுய்யனூரை சேர்ந்தவர் ராஜூ (வயது 65). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் குய்யனூர் அடுத்த குளத்துப்பிரிவு என்ற இடத்தை சேர்ந்த சம்பத்குமார் (37). லாரி டிரைவர். சொந்தமாக காரும் வைத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ராஜூவை அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் விடுவதற்காக சம்பத்குமார் காரில் அழைத்துச்சென்றார்.

சத்தி–மைசூர் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாரத விதமாக எதிரே வந்த பொக்லைன் எந்திரமும், காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த சம்பத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். ராஜூ படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த பகுதி மக்கள் ராஜூவை மீட்டு உடனே ஆம்புலன்சில் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார்கள்.

அங்கு சென்றதும் ராஜூவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுகுறித்து சத்திபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த சம்பத்குமாருக்கு பிரியா (35) என்ற மனைவியும், சுதிர் (8) என்ற மகனும், தனுஸ்ரீ (5) என்ற மகளும் உள்ளனர்.

இதேபோல் ராஜூக்கு சாந்தாமணி (60) என்ற மனைவியும், பிரசன்னஜெயந்தி (35), கவுசல்யா (32) என்ற மகள்களும், பிரபாகரன் (28) என்ற மகனும் உள்ளனர்.

இவர்கள் ராஜூ, சம்பத்குமாரின் உடல்களை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்