உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை

குளித்தலை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4¼ லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2019-03-23 23:00 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் நேற்று காலை தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியின் டிரைவரான நாமக்கல் மாவட்டம் தலமலைப்பட்டியை சேர்ந்த குமாரிடம் (வயது 46) விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம் வைத்து இருந்ததும், ராமநாதபுரத்தில் முட்டைகளை இறக்கி விட்டு அந்த பணத்துடன் நாமக்கல் நோக்கி சென்றதும் தெரிவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று மதியம் குளித்தலை அருகே மருதூர் போலீஸ் சோதனைச்சாவடிஅருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனின் டிரைவரான ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்த ராஜாவிடம் (24), ரூ. 86 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் வைத்திருந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்த 2 டிரைவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ. 4 லட்சத்து 21 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள், குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்