விவசாயி சரமாரி வெட்டிக் கொலை; 5 பேர் படுகாயம் பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது

சாமல்பட்டியில் திருவிழாவில் நடந்த மோதலில் விவசாயி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக பிரபல ரவுடி ஜிம் மோகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-23 23:00 GMT
ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டியில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர் சிலரை முன் வரிசையில் அமர வைத்து, மரியாதை செய்தனர். இதற்கு ஊர்பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சியினரை விழாவிற்கு அழைத்து வந்து மரியாதை செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஊர்பொதுமக்களுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அந்த நேரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் மற்றும் சிலர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பரசுராமன் (வயது 38) என்பவரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் பரசுராமனின் மனைவி மேகலா (30) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் சண்டையை தடுக்க சென்ற அண்ணாமலை(50). கோவிந்தி(55). புகழேந்தி(30). முனியம்மாள்(45) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்ட பரசுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிம் மோகன்(37), வெற்றிவேல்(25), வேடியப்பன்(45) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை தொடர்பாக மேலும் 16 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான ஜிம் மோகன் பிரபல ரவுடி ஆவார். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 4 முறை குண்டர் சட்டத்திலும் கைதான அவர் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் உள்ளார். இந்த கொலை காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே பரசுராமனின் உடலை வாங்க மறுத்தும், கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பரசுராமனின் உறவினர்கள், பொதுமக்கள் சாமல்பட்டியில் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் செய்திகள்