சேலத்தில் சூதாடிய 5 பேர் கைது

சேலத்தில் சூதாடிய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.88 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-24 22:30 GMT
சேலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாநகர போலீஸ்கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் மாநகர் பகுதி முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் அஸ்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ராம்நகர் ஓடை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் தாதகாப்பட்டியை சேர்ந்த குருபிரசாத் (வயது 41), வின்சென்ட்டை சேர்ந்த பாட்ஷா (45), கன்னங்குறிச்சியை சேர்ந்த கோபால் (32), ராம்நகரை சேர்ந்த சங்கர் (45), சரவணன் (45) என்று தெரிந்தது. மேலும் அவர்கள் பணம் வைத்து சூதாடியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.88 ஆயிரத்து 240 பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்