வடகட்டளை வெள்ளையாற்றில் சேதமடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வடகட்டளை வெள்ளையாற்றில் சேதமடைந்த படித்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-03-24 22:30 GMT
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகட்டளை என்ற இடத்தில் வெள்ளையாற்றின் கரையோரத்தில் அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக படித்துறை கட்டப்பட்டது. இந்த படித்துறை வடகட்டளை, கானூர், வேளுக்குடி, பழையனூர், மங்களாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த படித்துறை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. அதாவது இந்த படித்துறையில் உள்ள படிக்கட்டுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது. ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும் சமயத்தில் இந்த படித்துறையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி கீழே விழுந்து விடுகின்றனர்.

படித்துறை முற்றிலும் சேதமடைந்து இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்த படித்துறையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்