ஆரோவில் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்ற வெளிநாட்டு மாணவர் கைது

ஆரோவில் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்ற லிபியா நாட்டு மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-24 22:45 GMT

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆரோவில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆரோவில் அருகே பெரிய முதலியார்சாவடியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு போலீசார் பெரிய முதலியார்சாவடியில் வெளிநாட்டு வாலிபர் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், லிபியா நாட்டை சேர்ந்த ‌ஷபீது (வயது 23) என்பதும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிப்பதும் தெரியவந்தது.

அங்குள்ள மாணவர்களுக்கு கஞ்சா விற்றது தெரியவந்ததால், அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டை போலீசார் சோதனை செய்தபோது, சிறிய சிறிய பாக்கெட்டுகளாக 800 கிராம் கஞ்சா சிக்கியது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ‌ஷபீதை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்