கம்பம் அருகே, 13 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - போக்சோ சட்டத்தில் பெற்றோர் உள்பட 3 பேர் கைது

கம்பம் அருகே, 13 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2019-03-24 22:30 GMT
கம்பம்,

கம்பம் கே.ஆர்.நகரை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பார்த்திபன்(வயது 23). கூலித்தொழிலாளி. இவருக்கும் கம்பம் அருகேயுள்ள 13 வயது சிறுமிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி கட்டாய திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை சிறுமியின் விருப்பமில்லாமல் செய்து வைத்துள்ளனர். இது குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கட்டாய திருமணம் செய்து வைத்த சிறுமியின் தந்தை, தாயார், பார்த்திபன் மற்றும் அவரது தந்தை கோபால்(59), தாயார் வசந்தி(49) ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககோரி கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி சிறுமியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அந்த சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து கட்டாய குழந்தை திருமணம் மற்றும் பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை, தாயார், கோபால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பார்த்திபனையும், அவரது தாயார் வசந்தியையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்