தடப்பள்ளி வாய்க்காலில் வெவ்வேறு இடங்களில் மிதந்த 2 பெண் பிணம் கோபி அருகே பரபரப்பு

கோபி அருகே தடப்பள்ளி வாய்க்காலில் வெவ்வேறு இடங்களில் 2 பெண் பிணம் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-25 22:15 GMT

கடத்தூர்,

கோபி அருகே தொட்டியபாளையத்தில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் 75 வயது மூதாட்டி பிணம் மிதப்பதாக கோபி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டி பிணத்தை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? குளிக்கும்போது வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கோபி அருகே உள்ள பிள்ளையார்கோவில் துறை பகுதியில் செல்லும் தடப்பள்ளி வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று மிதந்தது. இதுபற்றி அறிந்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தடப்பள்ளி வாய்க்காலில் வெவ்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் 2 பெண் பிணங்கள் மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்