பல்லாவரம் அருகே பரிதாபம் கணவர், மகள் இறந்த சோகம் தாங்காமல் பெண் தீக்குளித்து தற்கொலை

பல்லாவரம் அருகே, கணவர், மகள் அடுத்தடுத்து இறந்ததால் விரக்தி அடைந்த பெண், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-03-25 22:15 GMT
தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் முத்தமிழ்நகரை சேர்ந்தவர் அருணா(வயது 50). இவருடைய கணவர் ஸ்ரீராம், கடந்த 18-ந்தேதி மாரடைப்பால் இறந்தார். அதைத்தொடர்ந்து 21-ந் தேதி இவர்களுடைய மகள் ராதிகாவும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கணவர், மகள் இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் அருணா, மிகவும் மனம் உடைந்தார். இருவரையும் நினைத்து அழுதுகொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அருணாவின் வீட்டில் இருந்து புகை வெளியேறியது. இதனால் அவரது வீடு தீப்பிடித்து எரிவதாக நினைத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே அருணா, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சங்கர்நகர் போலீசார், அருணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது கணவர் மற்றும் மகள் இறந்த சோகம் தாங்காமல் அருணா, தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்