தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கொடிய விஷப்பாம்பு, உடும்புகள் கடத்தல் விமான நிலையத்தில் வாலிபர் கைது

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு அட்டைப்பெட்டியில் மறைத்து கொடிய விஷப்பாம்பு, உடும்பு, ஆமைகளை கடத்தி வந்ததாக சென்னை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-25 23:45 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

தாய்லாந்து விமானத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் முகமது அப்துல் மஜீத் (வயது 22) என்பவர் வந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த அட்டை பெட்டிகள் ஊர்ந்து செல்வதை கண்டுபிடித்தனர்.

உடனே அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் கொடிய விஷமுள்ள பாம்பு, உடும்பு, எகிப்திய ஆமைகள், விஷ அரணை, எறும்புத்திண்ணி ஆகியவை இருந்தன. தாய்லாந்தில் இருந்து இந்த உயிரினங்களை மஜீத் கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து மத்திய வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.

இந்தியாவிற்கு உரிய அனுமதி இன்றி இவற்றை கொண்டு வரக்கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பாம்பு உள்ளிட்ட 34 வகையான கொடிய உயிரினங்களை அதிகாரிகள் மீட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்கள் தாய்லாந்து செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படும் என்று சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக கல்லூரி மாணவர் முகமது அப்துல் மஜீத்தை கைது செய்த அதிகாரிகள், அவர் யாருக்காக உயிரினங்களை கடத்தி கொண்டு வந்தார் என்று விசாரித்து வருகின்றனர்.

விமான நிலையத்தில் கொடிய உயிரினங்கள் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்