கந்தம்பாளையம் அருகே, கார் மோதி மொபட்டில் சென்ற 2 நண்பர்கள் பலி

கந்தம்பாளையம் அருகே மொபட்டில் சென்ற 2 நண்பர்கள் கார் மோதியதில் பலியானார்கள்.

Update: 2019-03-25 22:30 GMT
கந்தம்பாளையம்,

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலையடிவாரத்தை சேர்ந்த மாது என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 25). இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி கலைவாணி என்ற மனைவியும், விக்னேஸ்வரன் (3) என்ற மகனும் உள்ளனர்.

அசோக்குமாரின் நண்பர் திருச்செங்கோடு தொண்டிகரட்டை சேர்ந்த தங்கவேல் மகன் பூபதி (25). இவர் ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அசோக்குமாரும், பூபதியும் நேற்று மதியம் மொபட்டில் சொந்த வேலையாக பரமத்திவேலூருக்கு புறப்பட்டனர்.

கந்தம்பாளையம் அருகே கவுண்டிபாளையம் என்ற இடத்தில் இவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் இறந்தனர்.

இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்