விருத்தாசலம் அருகே, வாலிபர் தீக்குளித்து தற்கொலை - திருமணமாகாத விரக்தியில் விபரீதம்

விருத்தாசலம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-03-25 22:00 GMT
விருத்தாசலம், 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள நாகபந்தல் கிராமத்தை சேர்ந்தவர் உக்ரவேல் மகன் சங்கர்(வயது 35). இவர் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பரூர் கிராமத்தை சேர்ந்த தன்னுடைய அக்காள் இளஞ்சியம் வீட்டில் தங்கியிருந்தார். சங்கருக்கு திருமணமாகவில்லை. இதனால் அவர் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் தனது அக்காள் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சங்கரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்