சாத்தூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்: துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்ணை வெட்டிக்கொன்ற தொழிலாளி மகளுடனான கள்ளத்தொடர்பை கண்டித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

சாத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்டார். அவருடைய மகளுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்து துடைப்பதால் அடித்து விரட்டிய ஆத்திரத்தில் தொழிலாளி இந்த பயங்கர செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2019-03-27 23:15 GMT

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் பெரியசந்தானம் (வயது 53). இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பெரியசந்தானத்துக்கும் அதே ஊரைச்சேர்ந்த முனியாண்டி என்பவருடைய மகள் மின்னல்கொடிக்கும் (35) கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. திருமணமாகாத மின்னல்கொடியுடன் பல ஆண்டுகளாக பெரியசந்தானம் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த கள்ளத்தொடர்பு அம்பலத்துக்கு வந்துள்ளது. இதனால் பெரியசந்தானத்தை அவருடைய மனைவி மாரியம்மாள் கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது.

எனவே கடும் ஆத்திரம் அடைந்த மாரியம்மாள் நேற்று முன்தினம் நேராக முனியாண்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த மின்னல்கொடியின் தாயார் சுப்புத்தாயிடம் (60) தகராறு செய்து, சத்தம் போட்டுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் இரவில் பெரியசந்தானம் மின்னல்கொடியை தேடி வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சுப்புத்தாய் நடந்த சம்பவத்தை கூறியதோடு, பெரியசந்தானத்தை கண்டித்துள்ளார். மகளுடனான கள்ளத்தொடர்பை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். அதை ஏற்காமல் வாக்குவாதம் செய்த பெரியசந்தானத்தை துடைப்பத்தால் சுப்புத்தாய் அடித்து விரட்டியதாக தெரிகிறது.

இதன் காரணமாக ஆத்திரத்தில் இருந்த பெரியசந்தானம் நள்ளிரவில் மீண்டும் அங்கு வந்துள்ளார். அப்போது, வீட்டு திண்ணையில் சுப்புத்தாய் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை அரிவாளால் சரமாரியமாக வெட்டியுள்ளார். இதில் சுப்புத்தாய் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை பெரியசந்தானம் தூக்கிச்சென்று எதிரே உள்ள பாழடைந்த வீட்டினுள் போட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

நேற்று காலை மின்னல்கொடி தனது தாயாரை தேடிய அங்கு ரத்தக்கறை படிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தாயாரை தேடியபோது எதிரே உள்ள வீட்டில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பயநாயக்கன்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட சுப்புத்தாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் சம்பவத்துக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில், மகளுடனான கள்ளத்தொடர்பை விடும்படி சுப்புத்தாய் கண்டித்ததுடன், துடைப்பத்தால் அடித்த ஆத்திரத்தில் பெரியசந்தானம் அவரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. எனவே பெரியசந்தானத்தை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்