தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

பழனி அருகே தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-03-27 21:45 GMT
பழனி, 

பழனியை அடுத்துள்ள புதுஆயக்குடி 8-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 29). அவருடைய தாயார் நாகஜோதி. இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சுரேஷ்குமார் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். மேலும் கடந்த சில தினங்களாக யாரிடமும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தாய் இறந்த துக்கத்தில் சுரேஷ்குமார் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்த சுரேஷ்குமாருக்கு சித்ரா என்ற மனைவியும், சுபாஷினி, வசுந்தரா என்ற 2 மகள்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்