தஞ்சை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீசிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

தஞ்சை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீசிடம் 6 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-04-03 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருபவர் கலா(வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், மன்னார் குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது ஸ்கூட்டரில் சென்றார்.அங்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் தஞ்சைக்கு புறப்பட்டு வந்தார். தஞ்சையை அடுத்த துறையுண்டார்கோட்டை என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கலாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து மர்ம நபர்களை விரட்டிச்சென்றனர். அதற்குள் அவர்கள் தப்பிச்சென்றனர். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் கலா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து பெண் போலீசிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்