திருப்போரூர் அருகே தம்பியை வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது

திருப்போரூர் அருகே தாயை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த கூலித்தொழிலாளி தம்பியை வெட்டிக்கொலை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-07 22:15 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே காயார் செல்லும் சாலை வெண்பேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன்கள் இளங்கோவன் (வயது 33). கூலித்தொழிலாளி. சிவக்குமார் (30). திருமணம் ஆகாதவர். சிவக்குமார் கடந்த 5 ஆண்டுகளாக மது குடிக்க பணம் கேட்டு தாயை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதை அவரது அண்ணன் இளங்கோவன் தட்டிக்கேட்டு வந்தார். தொடர்ந்து தாயை துன்புறுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இளங்கோவன் தனது தம்பி சிவக்குமாரை கத்தியால் அவரது தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை சிவக்குமாரின் வீட்டில் அழுகை சத்தம் வருவதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சிவக்குமாரை அவரது அண்ணன் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து காயார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்