இணை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதியை பணி இடமாற்றம் செய்ய உத்தரவு தேர்தல் ஆணையம் நடவடிக்கை

மும்பை இணை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதியை பணி இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-07 22:45 GMT
மும்பை, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் மாநில அரசு மும்பை சட்டம்- ஒழுங்கு இணை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதிக்கு மட்டும் பணி இடமாற்ற உத்தரவில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டு இருந்தது.

தேர்தல் சமயத்தில் தேவன் பாரதியை பணி இடமாற்றம் செய்வது சரியாக இருக்காது. எனவே அவரை இணை கமிஷனராக தக்க வைத்து கொள்ள மாநில அரசு விரும்பியது.

இந்தநிலையில் மாநில தோ்தல் ஆணையம், மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்து உள்ளது. மேலும் உடனடியாக தேவன் பாரதியை பணி இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேவன் பாரதி மும்பை இணை போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புதிய பதவி எதுவும் இன்னும் ஒதுக்கப்படவில்லை.

தேவன் பாரதி 2008-ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல், பத்திரிகையாளர் ஜேடே கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரணை நடத்தியவர் ஆவார். மராட்டியத்தில் இந்திய முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை ஒழித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.

மேலும் செய்திகள்