மேச்சேரி அருகே தொழிலாளி மர்ம சாவு

மேச்சேரி அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2019-04-07 21:45 GMT
மேச்சேரி, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பள்ளிப்பட்டி ஊராட்சி உப்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32), கூலித்தொழிலாளி. இவருக்கும் மேச்சேரி அருகே கூத்தனூரை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு கலைவாணி கூத்தனூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று வசித்து வருகிறார்.

இந்தநிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சதீஷ்குமார் நேற்று முன்தினம் காலை கூத்தனூருக்கு சென்றார்.

இதன்பின்னர் அன்று இரவு கலைவாணியின் உறவினர்கள் சிலர் சதீஷ்குமாரை தூக்கிக்கொண்டு உப்புபள்ளத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள், சதீஷ்குமார் விஷம்குடித்த நிலையில் கலைவாணி வீட்டின் பின்புறம் படுத்து இருந்ததாக, சதீஷ்குமாரின் தாயார் விஜயாவிடம் கூறினர்.

இதனால் பதறிப்போன சதீஷ்குமாரின் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மேட்டூருக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சதீஷ்குமார் இறந்தார். இதுபற்றி சதீஷ்குமாரின் தந்தை கோவிந்தன் மேச்சேரி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளார். போலீசார் விசாரணை நடத்தி சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்