கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்: தந்தையை அடித்து கொன்ற மகன்

கஞ்சா வாங்குவதற்கு பணம் கொடுக்காததால் தந்தையை அடித்து மகன் கொலை செய்தார்.

Update: 2019-04-07 23:30 GMT

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன் (வயது 85). விவசாயி. அவருடைய மகன் பெருமாள் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கஞ்சா பயன்படுத்தும் பழக்கத்துக்கு அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

மேலும் கஞ்சா வாங்குவதற்காக, தனது தந்தையிடம் பணம் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் 15 கிலோமீட்டர் தூரம் வேடசந்தூருக்கு சென்று கஞ்சா வாங்கி பெருமாள் பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல கஞ்சா வாங்குவதற்காக கருப்பணனிடம் பெருமாள் பணம் கேட்டார்.

ஆனால் பணம் கொடுக்க மறுத்ததோடு அவரை கருப்பணன் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள், அங்கு கிடந்த குச்சியால் கருப்பணனை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் சுருண்டு விழுந்த கருப்பணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் கருப்பணனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால், தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்