தேவையற்ற இணையதள முகவரிகளை தடை செய்யக்கோரிய வழக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

தேவையற்ற இணையதள முகவரிகளை தடை செய்யக்கோரிய வழக்கில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-08 22:00 GMT

மதுரை,

மதுரை கீழக்குயில்குடியை சேர்ந்த விஜயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், செல்போன் பயன்பாட்டின் காரணமாக தற்போது ஒவ்வொருவரும் இருந்த இடத்திலேயே இணையதளத்தை உபயோகிக்கிறார்கள். இணையதளத்தால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல் (நீலத்திமிங்கல விளையாட்டு), வெப் புல்லிங் போன்ற விளையாட்டுகளால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகள் அதிகரிக்கத்துள்ளன. இது பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. இணையதளத்தில் தேவையில்லாத முகவரிக்குள் சென்று விபரீதத்தால் பாதிக்கப்படுவதில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற பெற்றோர்கள் தங்களது செல்போன், கணினி, மடிக்கணினிகளில், ‘பாரண்டல் விண்டோ‘ என்ற மென்பொருளை பயன்படுத்தி, தேவையற்ற முகவரிகளை தடை செய்யலாம். இந்த ‘பாரண்டல் விண்டோ‘ என்ற மென்பொருள் இருப்பது பற்றியும், அதை பயன்படுத்துவது குறித்தும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இணையதள சேவை வழங்கும் உரிமையாளர் சங்கத்தின் கடமை. ஆனால் ‘பாரண்டல் விண்டோ‘ குறித்து பலருக்கு தெரியவில்லை. இந்த மென்பொருள் பற்றி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களான ரிலையன்ஸ், ஜியோ, வோடபோன், பி.எஸ்.என்.எல். ஆகியவற்றை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார்கள். இந்த வழக்கு குறித்து மேற்கண்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 23–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்