சமரச மையத்தில் வழக்குதரப்பினர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு

சமரச மையத்தில் வழக்குதரப்பினர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயகாந்த் கூறினார்.

Update: 2019-04-09 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) விஜயகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளதரன், சார்பு நீதிபதிகள் ஸ்ரீரிஜா, வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன் ஆகியோர் பேசினர். முகாமில் முதன்மை நீதிபதி விஜயகாந்த் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தால் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு சமரச மையம் சிறப்பாக இயங்கி வருகிறது. இதில் வழக்கு தரப்பினர், தம் எதிர்தரப்பினருடன் பேசி சமரசம் செய்துகொள்ள ஏதுவாய் நீதிமன்றம் சமரச மையத்திற்கு வழக்குகளை அனுப்புகிறது.

இங்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்ட சமரசர்கள், வழக்கு தரப்பினர்களை சுமுகமாக வழக்கை முடித்துக்கொள்ள உதவுவர். நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு வழக்குத்தரப்பினர் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாட்களிலும், நாள் முழுவதும், சமரச மையம் இயங்கும். சமரச முயற்சி தனியறையில் நடத்தப்பட்டு இங்கு நடப்பவை அனைத்தும் மற்றவருக்கு தெரிவிக்கப்படாமலும், நீதிமன்றத்தில் விவாதிக்கப்படாமலும் பாதுகாக்கப்படும். வழக்கு தரப்பினர்கள் தாங்களே முன் வந்து ஒப்புக்கொள்ளும் தீர்வுகள் எட்டப்படும் என்றார்.

முன்னதாக முதன்மை நீதிபதி விஜயகாந்த் சமரசர்கள் நீதிபதிகள், சமரச வக்கீல்கள், வக்கீல்களுக்கு சமரச மையம் குறித்த பேட்ஜையும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, நீதித்துறை நடுவர் அசோக் பிரசாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் மோகனப்பிரியா, அட்வகேட் அசோசியேஷன் சங்கத்தலைவர் முகமது இலியாஸ், வக்கீல்கள் சங்கத்தின் செயலாளர் சுந்தரராஜன் மற்றும் சமரச வக்கீல்கள், வங்கி அலுவலர்கள், தாசில்தார்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் விஜயகுமாரி, மாவட்ட நீதிமன்ற மேலாளர் தனலட்சுமி, மாவட்ட நீதிமன்ற சிரஸ்தார் வீரவிஜயன் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்