மாயனூர் அருகே வேன் மோதி பெண் சாவு கணவர் கண்முன்னே பரிதாபம்

மாயனூர் அருகே வேன் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-04-09 22:15 GMT
கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம் மாயனூர் தண்ணீர் பாலம் பகுதியை சேர்ந்தவர் ஐதர்அலி(வயது 56). தனியார் பஸ்சில் டிரை வராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி குல்சார்பேகம் (54). வழக்கமாக வேலைக்கு செல்லும் ஜதர்அலி, தண்ணீர் பாலம் பகுதிக்கு பஸ்சை ஓட்டி வரும்போது, குல்சார்பேகம் சாலையோரம் காத்திருந்து, அவருக்கு சாப்பாடு கொடுத்து அனுப்புவார்.

அதுபோல், பஸ் திரும்பி வரும்போது, காலி சாப்பாடு பாத்திரத்தை சாலையோரம் காத்திருந்து குல்சார்பேகம் வாங்கிச்செல்வார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐதர்அலி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அவருக்கு, குல்சார்பேகம் இரவு சாப்பாடு கொடுத்து அனுப்பினார்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் கரூரில் இருந்து திருச்சி நோக்கி ஐதர்அலி பஸ்சை ஓட்டிச்சென்றார். தண்ணீர்பாலம் பகுதிக்கு பஸ் வந்த போது, அவருடைய மனைவி சாலையின் எதிர்பகுதியில் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த ஐதர்அலி பஸ்சை நிறுத்தினார்.

உடனே, குல்சார்பேகம் சாலையை கடந்து வந்து, கணவரிடம் இருந்து சாப்பாடு பாத்திரத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்ல திரும்பினார். அப்போது, அந்த வழியாக திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற வேன் எதிர்பாராத விதமாக குல்சார்பேகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்த ஐதர்அலி, பஸ்சில் இருந்து கதறியபடி, இறங்கி ஓடி தனது மனைவியின் உடலை பார்த்து அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் குல்சார்பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் கண்முன்னே வேன் மோதி பெண் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்