தந்தையை கொன்றவருக்கு 6 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

தந்தையை கொன்றவருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-04-09 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 60), பாத்திர வியாபாரி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் துரைக்கு(40) திருமணம் ஆகவில்லை. அவர், ஆறுமுகசாமியுடன் வசித்து வந்தார். மேலும் துரை வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவரின் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் ரூ.15 ஆயிரத்தை, அவரது வங்கி கணக்கில் ஆறுமுகசாமி செலுத்தி வந்தார்.

இந்தநிலையில் கடந்த 17-11-17 அன்று துரையின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் மட்டுமே ஆறுமுகசாமி செலுத்தினார். இதைத்தொடர்ந்து மீதமுள்ள ரூ.5 ஆயிரத்தை எப்போது தருவீர்கள் என்று தந்தையிடம், துரை கேட்டார். இதனால் ஆறுமுகசாமிக்கும், துரைக்கும் இடையே தகராறு நடந்து, அது கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த துரை வீட்டில் இருந்த குத்துவிளக்கை எடுத்து ஆறுமுகசாமியின் தலையில் அடித்து, வயிற்றில் குத்தினார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து துரையை கைது செய்து, நாகர்கோவில் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

6 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கை நீதிபதி எஸ்.கருப்பையா விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் தந்தையை கொன்ற துரைக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துரையை போலீசார் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகர் ஆஜரானார்.

மேலும் செய்திகள்