வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக 253 சக்கர நாற்காலிகள்

அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக 253 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

Update: 2019-04-10 23:00 GMT
அரியலூர்,

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்கும் பொருட்டு வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி வசதிகளுக்கான சிறப்பு பார்வையாளர் சந்திர மோகன் முன்னிலை வகித்து பேசியதாவது:-

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட 7,638 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாக உள்ளனர். மேலும், வாக்குப்பதிவு நாளன்று அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 184 வாக்குச்சாவடி மையங்களிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 147 வாக்குச்சாவடி மையங்களிலும் என மொத்தம் 331 வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கவுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக வாக்குச்சாவடி மையங்களில் 253 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தங்களுக்கு தேவையான உதவிகளை பெறுவதற்காக PWD என்னும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது, சக்கர நாற்காலிகளும் மற்றும் உபகரணங்களை பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நா.சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தா.பரிதாபானு, தேர்தல் தாசில்தார் சந்திரசேகரன், பொறுப்பு அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 6 சட்டமன்ற தொகுதி தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் வசதிக்கான சிறப்பு பார்வையாளர் சந்திரமோகன், தேர்தல் அதிகாரி விஜயலட்சுமியுடன் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 11 வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார், பின்னர் மாற்றுத்திறனாளிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். 

மேலும் செய்திகள்