துபாயில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு நூதனமுறையில் கடத்திவரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நாகையை சேர்ந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-04-11 23:00 GMT
திருச்சி,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க திருச்சி விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரி பண்டாரம் தலைமையிலான குழுவினர் தீவிர சோதனை செய்தனர்.

அப்போது, ஒரு வாலிபர் தனது பேன்ட்டில் தங்க கொலுசு மற்றும் சங்கிலிகளை மறைத்து வைத்திருந்தார். அவரிடம் விசாரணை செய்த போது, அவர் நாகையை சேர்ந்த முகம்மது இலியாஸ் (வயது 30) என்பதும், அவர் கொண்டு வந்த நகைகள் எனாமல் பூசப்பட்ட கவரிங் நகை என்றும் கூறினார்.

ஆனால், அவர் கூறியதை நம்பாத சுங்கத்துறை அதிகாரிகள், அந்த நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது, அவை 297 கிராம் எடைகொண்ட தங்க நகைகள் என்றும், அதிகாரிகள் சோதனையின் போது தப்பிக்க அவற்றின் மீது எனாமல் பூசி நூதன முறையில் கடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.9½ லட்சம் ஆகும். மேலும் முகம்மது இலியாசிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்