வேலை, கடன் வாங்கித்தருவதாக மோசடி: தனியார் அறக்கட்டளை நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

வேலூரில் தனியார் மருத்துவமனையில் வேலைவாங்கித் தருவதாகவும், கடன் பெற்றுத்தருவதாகவும் கூறி மோசடி செய்த தனியார் அறக்கட்டளை நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-12 22:45 GMT

வேலூர், 

வேலூரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் ஜான்கென்னடி (வயது 45). இவர் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண்களை சந்தித்து மகளிர் குழுக்கள் தொடங்கினால் கடன் பெற்று தருவதாக கூறி உள்ளார். அதை நம்பிய பெண்கள் ஒன்றிணைந்து மகளிர் குழுக்களை தொடங்கி உள்ளனர்.

அவர்களிடம் தலா ரூ.600 மற்றும் இன்சூரன்ஸ் ரூ.1,200 என ஜான்கென்னடி வசூல் செய்துள்ளார். ஆனால் அவர் கடன்பெற்றுத்தரவில்லை. இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்கென்னடியை கைது செய்தனர்.

இவர் மீது ஏற்கனவே வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் ரூ.14 லட்சம் பெற்று மோசடி செய்ததாகவும் ஒரு வழக்கு உள்ளது. இதுபோன்று அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று ஜான்கென்னடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் குற்றப்பிரிவு போலீசார், ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்