நவிமும்பையில் ரூ.4¼ லட்சம் போதைப்பொருள் பறிமுதல்

நவிமும்பையில் ரூ.4¼ லட்சம் போதைப்பொருள் பறிமுதல். 2 வெளிநாட்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-04-12 22:49 GMT
நவிமும்பை, 

நவிமும்பை கன்சோலி பகுதியில் சம்பவத்தன்று இரவு போதைப்பொருளுடன் வாலிபர் ஒருவர் வருவதாக ரபோலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சாதாரண உடையில் கண்காணித்தனர். 

அப்போது, அந்த பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை போட்டனர். இதில், அவர் வைத்திருந்த பையில் ‘மெத்தகுலோன்’ என்ற போதைப்பொருள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 

இதையடுத்து அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை அதிரடியாக கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அவர் சிரியா நாட்டை சேர்ந்த தைலோ ஐலசோ (வயது34) என்பது தெரியவந்தது. 

மேலும் அவர் கொடுத்த தகவலின்போில் அவரது கூட்டாளியான நைஜீரியா நாட்டை சேர்ந்த பா புபேத்(33) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 45 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்